பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்த வேண்டுகோள்


பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்த வேண்டுகோள்
x

பெரம்பலூரில் புத்தக திருவிழா நடத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 8-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் நேற்று நடந்தது. சங்கத்தின் மாவட்ட செயலாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான செல்வகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் கவுரவ தலைவர் டாக்டர் கருணாகரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும், திரைப்பட பாடலாசிரியருமான ஏகாதசி நிறைவுரை ஆற்றினார். முன்னதாக பெரம்பலூர் எழுத்தாளர்களின் புத்தக கண்காட்சி மற்றும் ஓவிய கண்காட்சி, தலித் படைப்புகள் குறித்து கருத்தரங்கம், இசையும், பாடலும் நடந்தது. பெரம்பலூரில் மாவட்ட நிர்வாகம் மீண்டும் புத்தக திருவிழாவை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் பெரம்பலூர் மாவட்டம் 12-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவில் முதலிடமும், 10-ம் வகுப்பு தேர்வில் 2-ம் இடமும் பிடித்ததற்கு உழைத்த மாவட்ட நிர்வாகத்துக்கும், பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட கலைஞர்கள் எழுத்தாளர்களின் கலைத்திறன் செயல்பாடுகளை நடத்த பொதுவெளி அரங்க மேடை ஒன்றை மாவட்ட நிர்வாகம் அமைத்து தர வேண்டும். பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கலைத்திறன் வளர்க்கும் நோக்கில், அவர்களுக்கு ஆண்டுதோறும் கலை எழுத்து திறன் போட்டிகள் நடத்த வேண்டும். பள்ளிகளில் இலக்கிய மன்றம், நூலகம் ஆகியவற்றின் செயல்பாடுகளை புனரமைத்து நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும். உலகளவில் பெரம்பலூரின் தொல்லியல் பெருமையை வெளிப்படுத்தும் பொருட்டு தொல்லியல் ஆய்வுகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராமர் வரவேற்றார். முடிவில் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


Next Story