கிணற்றில் இருந்து ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணமாக மீட்பு


கிணற்றில் இருந்து ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணமாக மீட்பு
x

தோகைமலை அருகே கிணற்றில் இருந்து ரத்தக்காயத்துடன் கொத்தனார் பிணமாக மீட்கப்பட்டார். இதனால் அவர் கொலை செய்யப்பட்டரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

கொத்தனார்

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கொத்தனார். இவருக்கும், திருச்சி மாவட்டம், சித்தாநத்தம் பகுதியை சேர்ந்த சுகந்தி (37) என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு வினோதா என்ற மகளும், கபில்நாத், யோகேஸ்வரன் என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் செல்வதிற்கும், ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளதால், அடிக்கடி கணவன், மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் சுகந்தி தனது 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குத்தித்தார். இதில், வினோதா என்ற பெண் குழந்தை இறந்து விட்டது. சுகந்தி உள்பட 3 பேரையும் அங்கிருந்தவர்கள் காப்பாற்றி விட்டனர். இதைத்தொடர்ந்தும் செல்வம் தனது கள்ளத்தொடர்வை கைவிடாததால் சுகந்தி கணவனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

தூங்கிய இடத்தில் ரத்தக்கறை

இதனால் செல்வம் தனது 2 மகன்களுடன் தனது தாய் சிங்காரியுடன் வசித்து வந்தார். செல்வம் தினமும் இரவு தனது வீட்டின் அருகே ஆஸ்பிட்டாஸ் கொட்டகையில் தூங்குவது வழக்கம். அதேபோல்ங நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே செல்வம் தூங்கினார்.

நேற்று காலை வெகுநேரம் ஆகியும் செல்வம் வீட்டிற்கு வரவில்லை. இதையடுத்து செல்வம் தூங்கி கொண்டிருந்த இடத்திற்கு சென்று அவரது மகன் கபில்நாத் பார்த்துள்ளார்.

அப்போது அங்கு ரத்தக்கறை கிடந்துள்ளது. மேலும் செல்வம் தூங்கிய இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கிணற்றிலும் ரத்தகறை அதிகமாக இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த செல்வத்தின் உறவினர்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர், தோகைமலை போலீசர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

ரத்தக்காயத்துடன் பிணமாக மீட்பு

பின்னர் தீயணைப்பு துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து, பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி செல்வத்தை தேடினர். பின்னர் நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு செல்வம் பிணமாக மீட்கப்பட்டார்.

அப்போது அவரது தலையில் பலத்த காயம் இருந்துள்ளது. இதனால் கரூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் செல்வத்தின் உடலை மோப்பம் பிடித்தவாறு சிறது தூரம் சென்று படுத்து கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் போலீசார் செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, செல்வம் எப்படி இறந்தார்? அவரை யாரேனும் கொலை செய்து இழுத்து சென்று கிணற்றில் வீசி சென்றார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், செல்வத்துடன் தொடர்பில் இருந்த அந்த பெண்ணையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் செல்வம் எப்படி இறந்தார் என தெரியவரும் போலீசார் தெரிவித்தனர்.


Next Story