மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்:பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை


மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்:பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
x

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நாமக்கல்

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் தலைமையில் நேற்று நடந்தது. கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-2, நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், நெடுஞ்சாலை திட்ட நில எடுப்பு பணிகள், பட்டா கோரி நிலுவையில் உள்ள மனுக்கள், எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி உட்கட்டமைப்பு பணிகள் குறித்து கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.

மேலும் மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் திட்டம், முதல்வரின் முகவரி மனுக்கள், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

காலதாமதமின்றி நடவடிக்கை

இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் பேசும்போது கூறியதாவது:-

பொதுமக்களின் மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு திட்டங்கள் பயனாளிகளுக்கு சென்றடைகிறதா? என்பது குறித்து துறை அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். நேரடியாக சென்று முறையாக கள ஆய்வு செய்ய வேண்டும்.

ஊரக வளர்ச்சித் துறையினர் தாங்கள் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் கால தாமதமின்றி முடித்திட வேண்டும். தொடர்ந்து கள ஆய்வு செய்து ஏதேனும் தொய்வு இருப்பின் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலந்து ஆலோசித்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். நீண்ட காலமாக தாமதம் ஏற்பட்டால் உடனடியாக கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகடன் உதவி

முன்னதாக தமிழ்நாடு நகர்புறவாழ்விட வாழ்வதார மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பெறுவதற்காக தலா ரூ.1 லட்சம் வீதம் 32 பயனாளிகளுக்கு ரூ.32 லட்சத்திற்கான வங்கிக் கடன் உதவிக்கான காசோலைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், இணை இயக்குனர் (மருத்துவபணிகள்) ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் பிரபாகரன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கலையரசு உள்பட நகராட்சி ஆணையாளர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story