வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான இடங்கள் குறித்து ஆய்வு - இஸ்ரோ தலைவர் தகவல்


வேற்று கிரகங்களில் வாழ்வதற்கான இடங்கள் குறித்து ஆய்வு - இஸ்ரோ தலைவர் தகவல்
x

கோப்புப்படம்

விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஏற்பாடு செய்த இன்ஸ்டாகிராம் நேரலை நிகழ்ச்சி மூலம், பொதுமக்களின் கேள்விகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பதில் அளித்து பேசினார்.

பூமி வாழ முடியாததாக மாறுவது குறித்து கேட்ட கேள்விக்கு, சோம்நாத் பதில் அளித்து பேசும்போது, 'முதலில் நமது சூரிய குடும்பத்தின் அனைத்து உறுப்புகளையும் (கோள்கள், நிலவு மற்றும் சூரியன்) பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. பின்னர் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள விண்வெளி பகுதிகள் உள்பட மற்ற விஷயங்கள் பற்றி ஆய்வு செய்ய வேண்டும். பூமி இன்னும் வாழக்கூடியதாக இருந்தாலும் கூட, பிற கிரகங்கள் மற்றும் வாழ்வதற்கான இடங்களை ஆய்வு செய்ய வேண்டும்.

விண்வெளியில் மனித இருப்பை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமாக ககன்யான் இருக்கும். வருகிற 2035-ம் ஆண்டு விண்வெளி நிலையத்தை உருவாக்கவும், 2040-ம் ஆண்டு நிலவில் மனிதனை தரையிறக்கவும் இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. விண்வெளி சுற்றுலாவின் வாய்ப்புகள் சோதிக்கப்பட உள்ளது.

விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டவுடன், அனைத்து சவால்களையும் கையாள சரியான பயிற்சியுடன் விண்வெளிக்கு செல்லும் நபர்கள் தேவைப்படும். இதனால் நூற்றுக்கணக்கான சோதனைகளும் இடம் பெறும்.

இஸ்ரோவில் சேருவது அல்லது விண்வெளித்துறையின் ஒரு பகுதியாக மாறுவது எப்படி என்பது குறித்த பல கேள்விகளுக்கு பதில் அளித்த சோம்நாத், முதலில் நல்ல கல்வித்தரங்களைப் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும். பின்னர் குறிப்பிட்ட திறன்களை உருவாக்க வேண்டும் என்று மாணவர்களை வலியுறுத்தினார். மேலும் அவர், "ஒவ்வொரு ஆண்டும் இஸ்ரோ பணியமர்த்தும் போது மனிதவளம் குறைவாக உள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் அழைக்கும் ஒவ்வொரு 100 பதவிகளுக்கும் சுமார் 1½ லட்சம் விண்ணப்பங்களைப் பெறுகிறோம்" என்று அவர் பேசினார்.


Next Story