மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்


மீண்டும் புத்துயிர் பெறும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2022 7:57 PM GMT (Updated: 10 Dec 2022 9:39 AM GMT)

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது.

அரியலூர்

1972-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக மறுவாழ்வு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி கொண்டு வந்தார்.

இதன் மூலம் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு அவர்கள் தகுதிக்கு ஏற்ப சுயதொழில் வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கிக் கொடுத்தது.

ஓடி ஒளிந்தார்கள்

* ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் என்று மக்கள் கூடுகிற இடங்களில் பிச்சை எடுப்பவர்களை, வாகனங்களில் வந்து பிடித்துப் போவார்கள்.

அரசு வாகனங்கள் வருவதைக் கண்டாலே போதும் தங்களைப் பிடிக்க வருகிறார்கள் என்று பிச்சைக்காரர்கள் ஓடி ஒளிந்தார்கள்.

* அவ்வாறு பிடித்துப் போனவர்களில் நோயாளிகளாக இருந்தால் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

* மன நோயாளிகளாக இருந்தால் மனநல காப்பகத்தில் சேர்க்கப்படுவர்.

* மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் அவர்களின் தகுதிக்கு ஏற்ப சுயதொழில்கள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

* நிர்பந்தங்களால் பிச்சை எடுக்க வந்தவர்களாக இருந்தால் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்.

* இதற்காக தமிழ்நாட்டில் 6 இடங்களில் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் கட்டித் தரப்பட்டன

இது ஒரு உன்னதமான சமூகநலத் திட்டம். இதை ஒழுங்காக நடைமுறைப்படுத்தி இருந்தால் பிச்சைக் காரர்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தி இருக்க முடியும்.

காசு பார்க்கும் கயவர்கள்

'பிச்சை எடுத்து உண்ணுவது அவமானம். உழைத்து உண்பதே தன்மானம்' என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாக அமைந்தது. நாளடைவில் அது முடங்கிப் போனதால் பஸ், ரெயில் நிலையங்கள், போக்குவரத்து சிக்னல்கள், வழிபாட்டு தலங்கள் போன்ற இடங்கள் மீண்டும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறிப்போயின.

குழந்தைகளின் வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக ஆதரவற்ற முதியோர்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு ஆளாகுகின்றனர். அதே நேரம், உழைக்காமல் கையை நீட்டினாலே பணம் கிடைப்பதால் பிச்சை எடுப்பதை தொழிலாக பலர் செய்யவும் துணிகிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால்? குழந்தைகள், பெண்களை கட்டாயப்படுத்தி இந்தத் தொழிலில் தள்ளி காசு பார்க்கும் கயவர் கூட்டமும் நிழல் மறைவாய் இருக்கத்தான் செய்கிறது. இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' திரப்படம், இந்த அக்கிரமத்தை வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது.

பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், இந்தூர், லக்னோ, நாக்பூர், பாட்னா, அகமதாபாத் ஆகிய 10 நகரங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

போலீஸ் நடவடிக்கை

தற்போது தமிழ்நாட்டில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தவும், அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களைச் சேர்ந்த சிலரும் தமிழ்நாட்டில் பிச்சை எடுப்பதை தொழிலாகச் செய்து வருகிறார்கள். போக்குவரத்து அதிகமாக இருக்கும் 'சிக்னல்' பகுதிகளில் அவர்களை குழந்தை குட்டிகளுடன் காண முடிகிறது.

இந்த நிலையில் 'ஆபரேஷன் மறுவாழ்வு' என்ற அதிரடி நடவடிக்கையை தமிழக போலீஸ்துறை கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் கடந்த 3-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் பிச்சைக்காரர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் அரசு காப்பகங்கள், மறுவாழ்வு மையங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.

பெண்கள், குழந்தைகளை பிச்சை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கடும் எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

இதில் கண்துடைப்பு இல்லாமல் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றால் பிச்சை எடுப்பவர்கள் கட்டுப்படுத்தப்படுவதுடன் மறுவாழ்வும் பெறுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பிச்சை எடுக்கும் தொழிலை ஒழிப்பதற்காக எடுத்து வரும் இந்த நடவடிக்கை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து கீழே காண்போம்.

கண்காணிப்பு குழு

அரியலூர் மாவட்டம், தா.பழூர் கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த வக்கீல் ஜெயக்குமார்:- வேலை செய்வதற்கு இயலாத, ஆதரவற்ற முதியவர்கள் பிச்சைக்கு கையேந்தும்போதும், மனமிழகி பலர் காசு கொடுக்கிறார்கள். ஆனால் சமீப காலத்தில் பிச்சை எடுப்பது ஒரு தொழிலாக மாறிவிட்டது. கடத்தப்படும் குழந்தைகள், சிறுவர்களுக்கு செயற்கையாக ஊனம் ஏற்படுத்தி, பிச்சை எடுக்கும் தொழிலில் திணிக்கப்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது. நகர்ப்புறங்களில் பிச்சை எடுத்து சுற்றி திரிபவர்களை, இனம் கண்டு எளிதாக மறுவாழ்வு மையங்களில் சேர்த்து விடலாம். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்த மையங்களில் இருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இருப்பினும் போலீசாரின் முயற்சி பாராட்டுக்குரியது. மேலும் கிராமப்புறங்களில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களை இனம் கண்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்க வேண்டும்.

இதேபோல் பிச்சைக்காரர்கள், ஆதரவற்றவர்கள் போன்றோரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க வட்டார அளவில் கண்காணிப்பு குழு அமைத்து, அந்த குழுவில் போலீஸ் அதிகாரிகள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரை இடம்பெற செய்ய வேண்டும்.

மறுவாழ்வு மையங்களில் சேர்க்கப்பட்டவர்களை மாதத்திற்கு ஒரு முறையாவது நேரில் சென்று அந்த குழு கண்காணிக்க வேண்டும்.

பிச்சை எடுக்கும் நிலை தவிர்க்கப்படும்

விக்கிரமங்கலம் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்முருகன்:- தெருக்களில் சுற்றித்திரியும் பிச்சை எடுப்பவர்கள் உள்ளிட்டோருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் அவர்களை போலீசார் மீட்டு காப்பகங்களில் சேர்த்து வருவது மிகவும் வரவேற்கத்தக்கது. ஏனென்றால் தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவை இல்லாமல் மிகவும் சிரமத்தோடு, வேறு வழியின்றி கையேந்தும் நிலைக்கு சிலர் தள்ளப்படுகின்றனர். அவர்களை காப்பகத்தில் சேர்த்து அங்கு உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டால், பிச்சை எடுக்கும் நிலை தவிர்க்கப்படும். மேலும் அவ்வப்போது போலீசார் காப்பங்களுக்கு சென்று, அங்கு சேர்க்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா? சரியாக பராமரிக்கப்படுகிறார்களா? என்று கண்காணிக்க வேண்டும்.


Next Story