குட்டையில் பிணமாக மிதந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்


குட்டையில் பிணமாக மிதந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்
x

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் குட்டையில் பிணமாக மிதந்தார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டிக்குழிபள்ளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெரியசாமி(வயது 75). இவர் மின்சார வாரியத்தில் இளமின் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். தற்போது இவர் உடல்நிலை சரியில்லாத தனது மனைவி பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.

கடந்த 8-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ெபரியசாமி, பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் ராஜ்குமார், பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

குட்டையில் பிணம்

இந்நிலையில் கோரியாம்பட்டியில் இருந்து செட்டிக்குழிபள்ளம் செல்லும் சாலையில் கல்லுக்குழி குட்டையில் ஒருவர் பிணமாக மிதப்பதாக கிடைத்த தகவலின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் அங்கு சென்று, உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் குட்டையில் பிணமாக மிதந்தது பெரியசாமி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், பெரியசாமியின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமி குடிபோதையில் கால் கழுவ சென்றபோது, குட்டையில் தடுமாறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story