வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்


வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சியில் வளர்ச்சி திட்டபணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் சட்டபேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி

தமிழக சட்டசபை கூட்டத்தில் இதுநாள் வரை எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் கோரிக்கைகளை நிறைவேற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?, எவ்வளவு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது?, நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது இதுவரை எவ்வளவு சதவீத பணிகள் நடந்துள்ளன? மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் நேற்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தனர்.

இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் அண்ணாநகர் மோகன், சேலம் அருள்,ஆம்பூர் விஸ்வநாதன், நாமக்கல் ராமலிங்கம், பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மருத்துவமனையில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டனர். பின்னர் சின்னசேலம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் 2 குடோன்கள் மற்றும் புகையிலை தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உளுந்தூர்பேட்டை பஸ் நிலையத்தில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த கழிப்பறை சரியாக பராமரிக்காமல் இருந்தது தெரிந்தது. இதையடுத்து கழிப்பறை பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய உறுதிமொழி குழுவினர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.

ஆய்வுக்கூட்டம்

இந்த ஆய்வின்போது கலெக்டர் ஷ்ரவன்குமார், போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். அதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவினர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் உறுதிமொழி குழுவினர் கூறுகையில், சின்னசேலத்தில் இயங்கி வரும் புகையிலை நிறுவனம் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. எனவே அந்த நிறுவனத்தின் தயாரிப்பு விதிமுறைகள் குறித்து அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் அந்த பகுதியில் உள்ள தண்ணீரை ஆய்வுக்கு அனுப்பி அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். கூட்டத்தில் சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன்,

மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், மாவட்ட வருவாய்

அலுவலர் சத்தியநாராயணன், துணை செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story