அரிசி-மளிகை பொருட்களின் விலை உயர்வு: துவரம் பருப்பு விலை தாறுமாறாக அதிகரிப்பு

அண்டை மாநிலங்களில் வரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. துவரம் பருப்பு விலை தாறுமாறாக உயர்ந்து, ஒரு கிலோ ரூ.160 வரை விற்பனை ஆகிறது.
சென்னை,
மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குறித்து சென்னை கோயம்பேடு உணவு தானிய மொத்த சந்தை வியாபாரி பாண்டியராஜன் கூறியதாவது:-
துவரம் பருப்பு
தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 8 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.
குறிப்பாக துவரம் பருப்பு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.90 அளவில் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.
அரிசி விலை உயர்வு
அதேபோல மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நீட்டு மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
போக்குவரத்து, வண்டி-ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிசந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை பட்டியல்
சென்னை கோயம்பேடு மார்க்கெட் உணவு தானிய அங்காடியின் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்தவிலையில்)
துவரம் பருப்பு- ரூ.150 முதல் ரூ.160 வரை, சிறுபருப்பு- ரூ.90, உளுந்தம் பருப்பு- ரூ.100 முதல் ரூ.110 வரை, உருட்டு கடலை- ரூ.70, கடலை பருப்பு- ரூ.65 முதல் ரூ.70 வரை, மிளகாய் தூள் (அரை கிலோவில்) - ரூ.215, தனியா தூள்- ரூ.112, மஞ்சள் தூள்- ரூ.78, சீரகம்- ரூ.600, சோம்பு- ரூ.300, கடுகு- ரூ.98, மிளகு- ரூ.590, வெந்தயம்- ரூ.85, ஆட்டா (10 கிலோ) - ரூ.490, மைதா (10 கிலோ) - ரூ.430, சர்க்கரை (50 கிலோ மூடை) - ரூ.2,050, வெல்லம்- ரூ.58, புளி- ரூ.90, பூண்டு- ரூ.80 முதல் ரூ.180 வரை (ரகத்துக்கு ஏற்ப), முந்திரி- ரூ.890, திராட்சை- ரூ.250, சன் பிளவர்- ரூ.112, நல்லெண்ணெய்- ரூ.290, தேங்காய் எண்ணெய்- ரூ.180, டால்டா (அரை கிலோவில்) - ரூ.51, ஏலக்காய்- ரூ.1,700, நீட்டு மிளகாய்- ரூ.315, தனியா- ரூ.120, பச்சை பட்டாணி- ரூ.78, வெள்ளை பட்டாணி- ரூ.68, கருப்பு சென்னா- ரூ.69, சாதா பொன்னி (26 கிலோ மூடை) - ரூ.1,100, மீடியம் பொன்னி - ரூ.1,200, முதல் ரக பொன்னி - ரூ.1,400, பாசுமதி சாதா- ரூ.2,700, பாசுமதி மீடியம்- ரூ.2,900, பாசுமதி யூனிட்டி- ரூ.3,450, பிரியாணி அரிசி- ரூ.2,600, இட்லி அரிசி- ரூ.900.






