மெகா பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம்


மெகா பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
x

விக்கிரவாண்டி- தஞ்சாவூர் சாலையில் மெகா பள்ளங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் திக்... திக்.... பயணம் செய்து வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலை பண்ருட்டி, நெய்வேலி ஆர்ச்கேட், வடலூர், சேத்தியாத்தோப்பு, கும்பகோணம் வழியே செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றன. அதுபோல் என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள சுரங்கங்கள், அனல்மின் நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து கனரக வாகனங்களில் இங்குள்ள சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இதனால் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த சாலை கருதப்படுகிறது. ஆனால் இந்த சாலைகள் குறுகலாகவும், சாலையின் ஓரங்களில் குடியிருப்புகளும் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர்.

நான்கு வழிச்சாலையாக...

இதை தவிர்க்க விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரையிலான 165 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 4 வழிச்சாலையாக தரம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து 2010-ம் ஆண்டில் அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு கடந்த 2015-ம் ஆண்டு விக்கிரவாண்டி- தஞ்சாவூர் இடையேயுள்ள சாலையையும், வழியில் உள்ள பாலங்களையும் புதிதாக அமைக்க ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுவதாலும், நேரம் வீணாகுவதை கருத்தில் கொண்டும் விபத்தில்லா சாலைகளை அமைக்கும் வகையிலும் மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு கூடுதலாக ரூ.3,517 கோடி ஒதுக்கீடு செய்தது.

இதையடுத்து விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் வரை 4 வழிச்சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 3 பிரிவுகளாக பிரித்து பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த சாலை பணிகள் 2020-ம் ஆண்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த நான்கு வழிச்சாலை பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. தற்போது மேம்பாலங்கள், பாலங்கள், கால்வாய் பணிகள் நடைபெற்று வந்தாலும் கருங்கல் ஜல்லி, கான்கிரீட் கலவையை கொட்டி சமன் செய்தல், தார் சாலை அமைத்தல், சாலையின் நடுவே தடுப்பு அமைத்தல் ஆகிய பணிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடந்துள்ளது.

திக்... திக்.... பயணம்

குறிப்பாக விக்கிரவாண்டியில் இருந்து கோலியனூர் வரை 10 கி.மீ. தூரத்திற்கு சாலை பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் அப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு உள்ள பகுதிகளில் சாலை பணிகள் நடைபெறவில்லை. அதுபோல் கோலியனூரில் இருந்து கடலூர் மாவட்டம் ராசாப்பாளையம் வரை ஒரு சில இடங்களில் மட்டும் பாலம் பணிகள் முடிவுற்ற நிலையில் சாலை பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

இதனால் சாலைகளில் பெரிய, பெரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. மேலும் மின்விளக்கு வசதியும் இல்லை. இதன் காரணமாக அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இவ்வாறு போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக இருக்கும் இந்த சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் தினம், தினம் திக்... திக்... பயணம் செய்து வருகின்றனர்.

விரைந்து முடிக்கப்படுமா?

தற்போது கடந்த சில நாட்களாக விழுப்புரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அந்த சாலைகள் மேலும் படுமோசமாகியுள்ளது. குறிப்பாக கோலியனூர் கூட்டுசாலை, ராமையன்பாளையம், ஆழங்கால், சுந்தரிப்பாளையம், வாணியம்பாளையம், வி.அகரம், பஞ்சமாதேவி, குச்சிப்பாளையம், சின்னக்கள்ளிப்பட்டு, கண்டரக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் சாலையின் பல இடங்கள் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதோடு சாலையில் உள்ள மெகா அளவிலான பள்ளங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது.

இனி வரும் காலமும் பருவமழை காலம் என்பதால் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மெகா பள்ளங்களை மூடி தற்காலிகமாக சாலையை சீரமைப்பதோடு மட்டுமின்றி சாலையை கடந்து செல்லும் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான்கு வழிச்சாலை பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story