திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்


திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 3 March 2023 8:30 PM GMT (Updated: 3 March 2023 8:31 PM GMT)

திண்டுக்கல்லில் வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் வீடு புகுந்து வெட்டி கொல்லப்பட்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பூண்டு வியாபாரி கொலை

திண்டுக்கல் வேடப்பட்டி ஞானநந்தகிரி நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 35). இவருடைய மனைவி தெய்வானை (33). இவர்களுக்கு குழந்தை இல்லை. சின்னத்தம்பி, சரக்கு வாகனத்தில் ஊர், ஊராக சென்று பூண்டு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்து சின்னத்தம்பி வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர் மதியம் தனது வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றார். அப்போது ஒரு கும்பல் அரிவாள்களுடன் அவரை பின்தொடர்ந்து வந்தது. சின்னத்தம்பி தனது உறவினரின் வீட்டுக்குள் சென்றதும், அந்த கும்பலும் உள்ளே புகுந்து அவரை சூழ்ந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னத்தம்பி, அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் அங்கும் இங்குமாக ஓடினார். ஆனால் அந்த கும்பல் சுற்றிவளைத்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

சாலை மறியல்

திண்டுக்கல்லில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். இதற்கிடையே சின்னத்தம்பியின் உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதை அறிந்த அவருடைய உறவினர்கள் அங்கு திரண்டனர்.

பின்னர் சின்னத்தம்பியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி அரசு ஆஸ்பத்திரி முன்பு அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்ட சின்னத்தம்பியின் உடல், அவருடைய உறவினர்களிடம் வழங்கப்பட்டது.

ஆனால் கொலையாளிகளை கைது செய்ய வேண்டும். சின்னத்தம்பியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த திண்டுக்கல் கிழக்கு தாசில்தார் சந்தனமேரிகீதா, புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு உதயகுமார் ஆகியோர் விரைந்து வந்து சமரசம் செய்தனர். அதை தொடர்ந்து சின்னத்தம்பியின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story