விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள்


விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள்
x
தினத்தந்தி 4 Oct 2023 8:45 PM GMT (Updated: 4 Oct 2023 8:46 PM GMT)

பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி பகுதியில் விபத்துகளை தடுக்க 41 இடங்களில் சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு பேரணி

பொள்ளாச்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கோவை கோட்ட பொறியாளர் மனுநீதி தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரியங்கா கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார்.

பேரணி பாலக்காடு ரோட்டில் தொடங்கி, பஸ் நிலையம் உள்பட முக்கிய சாலைகள் வழியாக சென்றது. இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். பேரணியில் பொள்ளாச்சி கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம், உதவி கோட்ட பொறியாளர்கள் பாலமுருகன், கவுசல்யா, முதன்மை போக்குவரத்து வார்டன் கமலகண்ணன், கீரிசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

41 இடங்கள் கண்டுப்பிடிப்பு

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் விபத்தில்லா தமிழகத்தை உருவாக்க அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார். அதன்படி பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துக்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் ஆய்வு செய்ததில் 41 இடங்கள் விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையில் தற்போது வாகனங்கள் முக்கிய சந்திப்புகளில் அதிவேகமாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்த பகுதிகளில் வேக கட்டுப்பாட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சாலை விதிகளை பொதுமக்கள் கடைப்பிடித்து விபத்தில்லா பொள்ளாச்சியை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story