செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்


செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்
x

திருப்பத்தூர் அருகே செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

செல்போன் கோபுரம்

திருப்பத்தூர் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்போன் கோபுரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது கல்லாத்தூர் கிராம மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதனால் அங்கு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

ஆனால் செல்போன் கோபுரத்திற்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்தது. இந்தநிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பள்ளத்தில் கான்கிரீட் கொட்டப்பட்டு செல்போன் கோபுரம் அமைக்கும் பணி தொடங்கியது.

சாலை மறியல்

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளத்தை மூட வலியுறுத்தியும் கல்லாத்தூர் அருகே ஜலகாம்பாறை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story