வேப்பனப்பள்ளி அருகே சாலை வசதிக்கோரிகிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்புபோக்குவரத்து பாதிப்பு


வேப்பனப்பள்ளி அருகே சாலை வசதிக்கோரிகிராம மக்கள் சாலை மறியலால் பரபரப்புபோக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2023 7:00 PM GMT (Updated: 10 Sep 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே சாலை வசதிக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலப்பிரச்சினை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள தடத்தாரை கிராமத்தில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. சாலை விரிவாக்க பணியின்போது அதே கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், கிராம மக்களுக்கும் நிலப்பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சாலை பணிகள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. ஆனால் உரிய சாலை வசதி இல்லாததால் லாரி திரும்பி சென்றது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி- வேப்பனப்பள்ளி சாலையில் திரண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வேப்பனப்பள்ளி போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது சாலை பிரச்சினைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் கிருஷ்ணகிரி- வேப்பனப்பள்ளி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story