காவேரிப்பட்டணத்தில், பேனர் வைத்த விவகாரம்: தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திடீர் சாலைமறியல்


காவேரிப்பட்டணத்தில், பேனர் வைத்த விவகாரம்:  தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திடீர் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:45 PM GMT)

காவேரிப்பட்டணத்தில், பேனர் வைத்த விவகாரம்: தி.மு.க.-அ.தி.மு.க.வினர் திடீர் சாலைமறியல்

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தில் பேனர் வைத்த விவகாரத்தில், தி.மு.க.-அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேனர் விவகாரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தி.மு.க. சார்பில் பொது இடங்களில் இடையூறாக வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை அகற்ற கோரியும், நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்தும் அதி.மு.க.வினர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் ேக.அசோக்குமார் தலைமையில் போலீஸ் நிலையத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில், ஒன்றிய செயலாளர் பையூர் பெ.ரவி, பொதுக்குழு உறுப்பினர் கே.பி.எம்.சதீஷ்குமார், மாவட்ட ஆவின் தலைவர் குப்புசாமி, நகர செயலாளர் விமல், முன்னாள் நகர செயலாளர் வாசுதேவன், எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், வக்கீல்பிரிவு தலைவர் ஜெயக்குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா கேசவன், மாவட்ட அக்ரோ தலைவர் விக்ரம் குமார், மாவட்ட மாணவரணி செயலாளர் மோகன், ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர், ஒன்றிய மாணவரணி செயலாளர் சுரேந்தர் உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். ஆர்ப்பாட்ட முடிவில் அதே பகுதியில் அ.தி.மு.க.வினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு, போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தி.மு.க.வினர் சாலைமறியல்

இதையடுத்து காவேரிப்பட்டணத்தில் தி.மு.க. பேனர்களை போலீசார் அகற்றியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்ததும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினரும் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், முன்னாள் நகர செயலாளர் விவேகானந்தன், சோபன் பாபு, முத்துக்குமார், ஞானசேகர், கோகுல்ராஜ், பாரதிராஜா, வருண்குமார் இளையராஜா, குப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

காவேரிப்பட்டணத்தில் பேனர் வைத்த விவகாரம் தொடர்பாக தி.மு.க.-அ.தி.மு.க.வினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.


Next Story