ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை


ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
x
தினத்தந்தி 26 Jun 2023 6:53 PM GMT (Updated: 27 Jun 2023 10:49 AM GMT)

கபிஸ்தலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சாவூர்

கபிஸ்தலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற ஆசிரியர்

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் குயவர் தெருவில் வசிப்பவர் பரமசிவம் (வயது81). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவருடைய மனைவி ரமணீஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளன. அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் பரமசிவமும், அவரது மனைவியும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள்.

இவர்கள் கடந்த 21-ந் தேதி தனது மகள் ஊரான திருநாகேஸ்வரம் மற்றும் பேரளநந்தம் ஆகிய பகுதிகளில் நடந்த கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டனர்.

நகை, பணம் கொள்ளை

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வீட்டின் முன்புற கதவின் பூட்டை உடைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து பீரோவில் இருந்த 2 பவுன் நகைகள், ரூ.3,500, கால் கிலோ எடை கொண்ட சந்தனப்பேழை உள்ளிட்ட ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தெரிவித்த தகவலின்பேரில் பரமசிவம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

வலைவீச்சு

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகரன் மற்றும் போலீசார் தடயவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அதே தெருவில் சமீபத்தில் ஆசிரியர் ஒருவருடைய வீட்டிலும் மர்ம நபர்கள் திருடி உள்ளனர். ஒரே தெருவில் தொடர்ச்சியாக திருட்டு நடந்து இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அச்சத்தில் உள்ளனர்.


Next Story