திருவட்டாரில் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை


திருவட்டாரில் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 17 Jun 2023 7:15 PM GMT (Updated: 17 Jun 2023 7:15 PM GMT)

திருவட்டாரில் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

திருவட்டார்:

திருவட்டாரில் இருந்து கேசவபுரம் செல்லும் சாலையில் ராமன்கோணம் தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலுடன் தொடர்புடைய 12 காவுக்கோவில்களில் இதுவும் ஒன்று. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 நாள் திருவிழா நடந்தது. கோவிலுக்கு செல்லும் பாதையின் முன்புறம் ஒரு உண்டியல் உள்ளது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலில் விழாவுக்காக போடப்பட்டிருந்த பந்தலை பிரிக்கும் வேலையில் கோவில் செயலாளர் சிவ சஜூ மற்றும் நிர்வாகிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கோவிலின் எதிரே உள்ள ஒரு வீட்டில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் நடந்து வந்த ஒருவர் நைசாக உண்டியல் பூட்டை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்து அவர் அணிந்திருந்த லுங்கியில் அள்ளி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

இந்த காட்சியின் அடிப்படையில் போலீசார் கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த நபரை தேடி வருகிறார்கள்.


Next Story