தமிழகத்தில் ரூ.2,800 கோடி கோவில் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்


தமிழகத்தில் ரூ.2,800 கோடி கோவில் நிலங்கள் மீட்பு அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

தமிழகத்தில் உள்ள கோவிலுக்குச் சொந்தமான ரூ.2 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை, வளசரவாக்கம் அகத்தீசுவரர் மற்றும் வேள்வீசுவரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கு முன்பாக தொடங்கப்படும் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

கோவில் தெப்பக்குளத்தை பொருத்த அளவில் சென்னை மாநகராட்சி தெப்பக்குளம் மேம்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளது. சுற்றி நடைபாதை அமைத்து நடுவில் தண்ணீர் இருப்பது போல உருவாக்குவதற்கான வரைபடத்தை தயாரித்து சுமார் ரூ.84 லட்சம் செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றது. கோவில் தெப்பக்குளம் கோவிலுக்கு உண்டான வடிவமைப்புடன் இருக்க வேண்டும் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் வழிகாட்டுதல். அந்தவகையில் புதிதாக ஏற்படுத்துகின்ற தெப்பக்குளங்கள் என்றாலும், ஏற்கனவே இருக்கின்ற தெப்பக்குளங்களை சீர் செய்வது என்றாலும் கோவிலுக்கு உண்டான எந்த தெய்வத்தின் சார்புடைய தெப்பக்குளமோ அந்த தெய்வத்தினுடைய அடையாளத்தோடு அந்த தெப்பக்குளத்தை புதிதாக மேம்படுத்தும் பணிகளை சீர்படுத்தி வருகிறோம்.

ரூ.2,800 கோடி இடங்கள் மீட்பு

இந்த பிரச்சினைகள் குறித்து மாநகராட்சியும், இந்து சமய அறநிலையத்துறையும் இணைந்து குளத்தை கோவில் தெப்பக்குளம் போல வடிவமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். அதற்கான வரைபடங்களை தயாரித்து வருகிற 10-ந்தேதிக்குள் முதல்-அமைச்சரின் ஒப்புதல் பெற்று பணிகள் தொடங்குவதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதேபோல் 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கோவிலின் திருப்பணிகள் முடிவுற்று 2010-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

ஆகமவிதிப்படி 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். திருப்பணிகள் மேற்கொள்வதற்கு அடிப்படை பணிகளை மண்டல குழுவின் ஒப்புதலை பெற்று தொடங்க இருக்கிறோம், மாநில குழுவின் ஒப்புதலை பெற்று கோவிலுக்கு வரும் பக்தர்களின் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவு செய்கின்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படும். கோவில் பெயரில் உள்ள பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்ட இடங்களின் பட்டாக்களை ரத்து செய்ய வருவாய்த்துறையிடம் முறையாக விண்ணப்பிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள உள்ளோம். இதுவரை கோவில்களுக்கு சொந்தமான ரூ.2 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வேட்டை தொடரும்

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்கிற வேட்டை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், சென்னை மண்டல இணை கமிஷனர் ரேணுகாதேவி, கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story