விவசாயி வீட்டில் ரூ.3½ லட்சம் நகைகள் கொள்ளை


மூங்கில்துறைப்பட்டு அருகே விவசாயி வீட்டில் புகுந்து ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

விவசாயி

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மேல் சிறுவள்ளூர்-கள்ளக்குறிச்சி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ஜானிபாஷா(வயது 54). விவசாயியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு வேலூரில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை ஜானிபாஷா வீட்டின் பின்பக்க கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அதுபற்றி அவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

நகைகள் கொள்ளை

இதையடுத்து வேலூரில் இருந்து புறப்பட்டு வந்த ஜானிபாஷா வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ கதவுகள் திறந்து கிடந்தன. மேலும் அதில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் பற்றிய தகவல் அறிந்த வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துககு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீ்ட்டை பார்வையிட்டு அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோ, கதவுகளில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.

வலைவீச்சு

மேலும் இதுகுறித்து ஜானிபாஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

விவசாயி வீட்டில் புகுந்து மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story