கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு


கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 3 May 2023 7:30 PM GMT (Updated: 3 May 2023 7:30 PM GMT)

கோவை காந்திபுரத்தில் கடையை உடைத்து ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

காந்திபுரம்

கோவை காந்திபுரத்தில் கடையை உடைத்து ரூ.4 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டிரேடர்ஸ் கடை

கோவை அருகே உள்ள கே.கே.புதூர் பெரியசுப்பன் வீதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 45). கோவை காந்திபுரம் வி.கே.கே.மேனன் சாலையில் டிரேடர்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தார்.

அப்போது கடையின் மெயின் ஷட்டர் அருகே உள்ள கண்காணிப்பு கேமரா திசை மாறிய நிலையில் இருந்தது. இதை பார்த்ததும் சந்தேகம் அடைந்த அருண்குமார், கடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது இரும்பு சீட்டால் வேயப்பட்ட கடையின் மேற்கூரை உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.

ரூ.4 லட்சம் திருட்டு

மேலும் கடையில் இருந்த சில பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இது தவிர மேஜையின் டிராயரில் இருந்த ரூ.4 லட்சத்தை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கடையின் மேற்கூரையை உடைத்து அதன் வழியாக உள்ளே புகுந்து பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின்பேரில் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் கைவிரல் ரேகை நிபுணர்களும் அங்கு வந்து, பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். அதில் கைரேகை கிடைத்து உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், அருண்குமாரின் கடையில் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story