சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி


சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடி
x

சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடியில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

சோலார் பேனல் தருவதாக ரூ.9.68 கோடி மோசடியில் ஈடுபட்ட ஐதராபாத்தை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோலார் பேனல் அமைக்கும் பணி

சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே மூவனூரில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை சென்னை தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு தொடர்பு கொண்டது.

ஐதராபாத் நிறுவனத்தை சேர்ந்த ஷீரிஷாபொலு, இவரது கணவர் பவன்குமார், சோலார் பேனல் விற்பனை பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் சென்னை மணலியில் உள்ள கிடங்கில் சோலார் பேனல்களை சேமித்து வைத்துள்ளோம். ஒரு சோலார் பேனலின் விலை ரூ.15 ஆயிரத்து 450 என்று தெரிவித்தனர்.

பெண் உள்பட 3 பேர் கைது

இதைதொடர்ந்து சென்னை நிறுவனத்தினர் 5,580 சோலார் பேனல்களை வாங்குவதற்காக ஷீரிஷாபொலுவின் வங்கி கணக்குக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 330-ஐ கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பினர். ஆனால் ஐதராபாத் நிறுவனம் கூறியவாறு சோலார் பேனல்களை வழங்கவில்லை.

இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று ஷீரிஷாபொலு, பவன்குமார், செல்வகணேஷ் ஆகிய 3 பேரையும் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்தனர்.


Next Story