சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி போதை பவுடர் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.100 கோடி போதை பவுடர் பறிமுதல்
x
தினத்தந்தி 12 Aug 2022 6:55 PM GMT (Updated: 12 Aug 2022 7:16 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வந்த ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் கொக்கைன் போதை பவுடரை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலின் பேரில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது எத்தியோப்பியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த இக்பால் பாஷா (வயது 35) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். சுற்றுலா விசாவில் எத்தியோப்பியா சென்று விட்டு சென்னை வந்ததாக அவர் கூறினார்.

ரூ.100 கோடி போதை பொருள்

மேலும் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் உடைமைகள் மற்றும் அவரிடம் இருந்த காலணிகளில் விலை உயர்ந்த போதை பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.100 கோடி மதிப்புள்ள 9 கிலோ 590 கிராம் எடையுள்ள கொக்கைன் மற்றும் ஹெராயின் போதை பவுடரை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக இக்பால் பாஷாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story