பெற்றோரை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டிய மகனின் சொத்து ஆவணம் ரத்து


பெற்றோரை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்டிய மகனின் சொத்து ஆவணம் ரத்து
x

தக்கலை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்தியதால் மகனின் சொத்து ஆவணத்தை ரத்து சப்-லெக்டர் கவுசிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே பெற்றோரை வீட்டை விட்டு துரத்தியதால் மகனின் சொத்து ஆவணத்தை ரத்து சப்-லெக்டர் கவுசிக் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பெற்றோரை துரத்திய மகன்

தக்கலை அருகே உள்ள குமாரபுரம் கைதோடு கோவில் விளாகம் பகுதியை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது 74). இவருடைய மனைவி தங்கம் (63).

இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். இதில் மூத்த மகன் இறந்து விட்ட நிலையில் இளைய மகன் அனீஷ் (36) என்பவரோடு வசித்து வந்தனர். இதில் தங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே அனீஷ் தனது மனைவியை விவாகரத்து செய்ததோடு பிரதீபா (35) என்பவரை 2-வதாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதன் பிறகு தாய், தந்தையான தங்கத்தையும், நீலகண்டபிள்ளையையும் அனீஷ் சரியாக கவனிக்கவில்லை. வயதான காலத்தில் மகன் கவனிப்பான் என எதிர்பார்த்திருந்த பெற்றோருக்கு இது பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் இருவரையும் வீட்டை விட்டு மகன் அனீஷ் துரத்தி விட்டார். இதனால் அவர்கள் உறவினர்கள் பராமரிப்பில் இருந்து வந்தனர்.

மகன் சொத்து ஆவணம் ரத்து

இந்தநிலையில் பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு சட்டம் தீர்ப்பாயத்தில் தாய் தங்கம் புகார் மனு கொடுத்தார். அதில், மகன் அனீஷ், மருமகள் பிரதீபா ஆகிய 2 பேரும் சேர்ந்து எங்களை கவனிக்காமல் வீட்டை விட்டு துரத்தி விட்டனர். எனவே எங்களது எதிர்காலம் கருதி மகனுக்கு எழுதி கொடுத்த சொத்துகளை மீட்டு எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை பரிசீலனை செய்த பத்மநாபபுரம் உட்கோட்ட நடுவரும், சப்-கலெக்டருமான கவுசிக் இருதரப்பினரையும் வரவழைத்து விசாரணை நடத்தினார்.

இதில் இருதரப்பு வாதங்களையும் அவர் பதிவு செய்து கொண்டார். பின்னர் நடுவர் கவுசிக், பெற்றோரை அனீஷ் முறையாக பாதுகாக்கவும், பராமரிக்கவும் தவறியுள்ளார் என முடிவு செய்தார். இதனை தொடர்ந்து தாயார் தங்கம், மகனுக்கு எழுதி கொடுத்த

7 சென்ட் நிலம் மற்றும் வீடு அமைந்துள்ள கட்டிட ஆவணத்தை ரத்து செய்தார்.

மேலும் பெற்றோரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மகன் தொந்தரவு செய்யக்கூடாது எனவும் அப்படி செய்தால் போலீஸ் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டார். பின்னர் ஆவணம் ரத்து செய்த உத்தரவை தக்கலை சார்பதிவாளருக்கும் அனுப்பினார்.


Next Story