ரூ.52 லட்சம் கடத்தல் தங்கம்- எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்


ரூ.52 லட்சம் கடத்தல் தங்கம்- எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
x

ரூ.52 லட்சம் கடத்தல் தங்கம்- எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி

செம்பட்டு:

கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் துபாயில் இருந்து இண்டிகோ விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கத்துறை அதிகாரிகள், அவரை தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர் ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (வயது 42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடைமையை சோதனை செய்தபோது, அதில் தங்கத்தை சங்கிலிகளாகவும், பசை வடிவிலும் மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதில் மொத்தம் 839 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.47 லட்சத்து 67 ஆயிரம் என்றும் தெரிகிறது.

எலக்ட்ரானிக் பொருட்கள்

மேலும் அதே பயணி தனது உடைமைகளில் மறைத்து கடத்தி வந்த எலக்ட்ரானிக் பொருட்கள், விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் சுமார் ரூ.51 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story