ரூ.56¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவி; அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்


ரூ.56¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குநலத்திட்ட உதவி; அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்
x
தினத்தந்தி 16 Sep 2023 6:45 PM GMT (Updated: 16 Sep 2023 6:47 PM GMT)

தக்கலையில் நடந்த விழாவில் ரூ.56¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலையில் நடந்த விழாவில் ரூ.56¾ லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.56.78 லட்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக் முன்னிலை வகித்தார். தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கருணாநிதி வழியில்...

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மாற்றுத்திறனாளிகளின் மேல் அதிக பற்று கொண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். இலவச பஸ் பயண அட்டை, திருமண உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் வழியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் செயல்பட்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் 22,857 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அட்டை 21,822 நபர்களுக்கு மற்றும் 6,917 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.2.68 லட்சம் பராமரிப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.56¾ லட்சத்தில்...

மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.14.61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 396 நபர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர். இதுபோக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

இதேபோல் இன்று (அதாவது நேற்று) நடைபெற்ற விழாவில் ரூ.56.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், சிங்காரவேலர் திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட 126 பயனாளிகளுக்கும், கல்குளம் வட்டத்திற்குட்பட்ட 253 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் தொடர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், பத்மநாபபுரம் நகராட்சி தலைவர் அருள் சோபன், தனி துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு) புகாரி, தாசில்தார்கள் கண்ணன் (கல்குளம்), ராஜேஸ் (அகஸ்தீஸ்வரம்), தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு, அகஸ்தீஸ்வரம்) ராஜாசிங், தி.மு.க. பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் வீர வர்கீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story