விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை


விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
x

ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜை விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம்


ராமநாதபுரத்தில் தேவர் குருபூஜை விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

ராமநாதபுரத்தில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115-வது பிறந்த நாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை முன்னிலையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது 144 தடை உள்ளது. குருபூஜையில் கலந்துகொள்ள வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ, சரக்கு வாகனம் போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

ஆவணங்கள்

சொந்தமாக நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்பந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன்அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு முன்அனுமதி பெறும்போது வாகனத்தின் பதிவுசான்று மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும்.

சொந்த வாகனங்களில் வருவோர் வாகனத்தின் உரிமையாளர் பெயர், அதில் பயணம் செய்பவர்கள், வாகனத்தின் பதிவு எண், அதன் ஓட்டுனர் போன்ற விவரங்களை உள்ளூர் போலீஸ் நிலையத்தில் முன்கூட்டியே தகவல் தெரிவித்து, அங்கே தரப்படும் அனுமதி சீட்டினை வாகனத்தின் முன்புற கண்ணாடியில் ஒட்டி இருக்க வேண்டும். ஒவ்வொரு காவல் மண்டலத்திற்கும் தனித்தனி வண்ணத்தில் அனுமதி சீட்டு அச்சடித்து அனுப்பி வைக்கப்படும்.

ஒலி பெருக்கி

வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தி செல்லக்கூடாது. வாகனத்தில் சாதிமத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன உரிமையாளர் தணிக்கையின் போது கட்டாயம் வாகனத்தில் இருக்க வேண்டும். அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வாகனங்களில் மது பாட்டில்கள் எடுத்து செல்லக்கூடாது. வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்யக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக்கூடாது. வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனங்களில் வரும்போது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங் களை நினைத்த இடத்தில் நிறுத்தக் கூடாது.

அனுமதி

நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து காலை 11 மணிக்குள் புறப்பட வேண்டும். தவிர்க்க இயலாத காரணங்களினால் அனுமதி சீட்டு பெறாத வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்படும். அனுமதி பெறப்படாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

பிற மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதிபெற வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் வரையறுக்கப்பட்டு உள்ள வழித்தடங்களிலேயே வந்து செல்ல வேண்டும். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டு உள்ள வழித்தடங்களில் செல்லக்கூடாது.

பஸ் வசதி

தலைவர்களுடன் செல்லும்பொழுது 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். மேலும், தலைவர்களது வாகனம் மற்றும் அதனுடன் செல்லும் 2 வாகனங்கள் பற்றிய விவரத்தினை நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே 23.10.22-ந் தேதிக்குள் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தெரிவித்து வாகன அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செல்ல வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29.10.22 மற்றும் 30.10.22-ம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பஸ் தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன்னதாகவே மனு அளிக்க வேண்டும்.

ஒதுக்கீடு

அரசு பஸ்களில் ஜோதி, மதுபாட்டில் மற்றும் ஆயுதங்கள் எடுத்துச்செல்வது, கொடி மற்றும் பேனர் கட்டிச்செல்வது, ஒலிபெருக்கி ஆகியவை தடை செய்யப்பட்டு உள்ளது. ஜோதி தொடர்பான உபகரணங்கள் பேருந்துகளில் எடுத்து செல்லக் கூடாது. அரசு பஸ்களில் மேற்கூரை மற்றும் படிக்கட்டில் பயணம் செய்யக்கூடாது. பஸ்களில் முறையாக டிக்ெகட் எடுத்து வர வேண்டும். மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் ஒரு வாரத்திற்கு முன்பே கலெக்டரிடம் விண்ணப்பம் அளிக்கவேண்டும். ஓவ்வொரு கட்சிக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்து அந்த நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும். எந்த ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினையும் இன்றி நிகழ்ச்சி நடைபெற பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

நடவடிக்கை

விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், அருண், நேர்முக உதவியாளர் சேக் மன்சூர், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் மரகதநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story