ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 13 Sep 2023 7:45 PM GMT (Updated: 13 Sep 2023 7:45 PM GMT)
சேலம்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்வு நிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலாளர்களுக்கும் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களுக்கு பணி வரன் முறைப்படுத்த வேண்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும். பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட செயலாக்கம் காரணமாக ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்டு உள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.

வெறிச்சோடியது

இதுகுறித்து சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஜான் ஆஸ்டின் கூறுகையில், ஊராட்சி செயலாளர்கள் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரை மாவட்டம் முழுவதும் 750-க்கும் மேற்பட்டவர்கள் பணியை புறக்கணித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம். இதனால் வரி வசூல், 100 நாள் வேலைக்கு சம்பளம் வழங்கும் பணி உளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே எங்கள் கோரிக்கைகள் குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அலுவலர்கள், ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


Next Story