சேலம்: நண்பருடன் ஏரிக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி


சேலம்: நண்பருடன் ஏரிக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலி
x

நண்பருடன் ஏரிக்கு குளிக்க சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம், ஜாகீர் காமநாயக்கன்பட்டி பூனைக்கரடு பகுதியை சேர்ந்தவர் குமார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கவின்குமார் (வயது 14), இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று மதியம் கவின்குமார் தனது நண்பருடன் மல்லமூப்பம்பட்டி ஏரிக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

குளித்துக்கொண்டிருக்கும் போது ஆழமான இடத்திற்கு சென்றதால் அவர் நீரில் மூழ்க ஆரம்பித்தார். இதை பார்த்த அவரது நண்பர் அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்தவர்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஏரியில் மூழ்கிய மாணவனை மீட்டனர். பின்னர் அவரை சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் . அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நண்பருடன் குளிக்க சென்ற மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story