சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புநிதி ரூ.556 கோடியாக உயர்வு; அமைச்சர் சேகர்பாபு தகவல்


சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புநிதி ரூ.556 கோடியாக உயர்வு; அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்பு நிதி ரூ.556 கோடியாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோவில், அருமந்தை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் திருப்பணிகள் தொடர்பாகவும், ஞாயிறு கிராமத்தில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு புதிய கோவில் கட்டுதல் தொடர்பாகவும் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

ரூ.40 லட்சத்தில் திருப்பணிகள்

ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள புஷ்பரதேஸ்வரர் கோவிலுக்கு 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் கடந்த நிலையில், ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கோவிலின் திருக்குளத்தினை மேம்பாடு செய்திடவும், கோவிலுக்குச் சொந்தமான காலி இடத்துக்கு சுற்றுசுவர் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளோம். இதற்கு கூடுதல் நிதி தேவையெனில் ஆணையரின் பொது நல நிதியில் இருந்து வழங்கப்படும்.

கோவில் கட்ட களஆய்வு

இந்த கிராமத்தில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 4 கிரவுண்டு இடத்தில் பூமிக்குள் புதைந்த நிலையில் இருந்த சிவலிங்கம் தற்போது வெட்டவெளியில் அமைக்கப்பட்டு தினந்தோறும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஒரு கோவில் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று களஆய்வு செய்து மக்களின் கருத்தை கேட்டறிந்தோம். இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து சென்று, புதிய கோவிலை உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற அனுமந்தை, வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான சுமார் 90 ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களிடம் முறையான வாடகை வசூல் செய்து கோவிலின் மேம்பாடு மற்றும் அன்றாட வழிபாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வைப்பு நிதி ரூ.556 கோடியாக உயர்வு

சமயபுரம் மாரியம்மன் கோவிலின் வைப்பு நிதியை பொறுத்த அளவில் 2018-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி ரூ.13 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை ரூ.9 கோடி 80 லட்சம் அளவுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கோவிலில் 1-7-2021 அன்று ரூ.458 கோடி நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது 28-2-2023 அன்று வரை ரூ.556.39 கோடி வைப்பு நிதியாக உள்ளது.

அதாவது, தி.மு.க. ஆட்சியில் ரூ.98.39 கோடி வைப்பு நிதியில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதியில் இருந்து பெருந்திட்ட வரைவுக்கு நிதி எதுவும் எடுக்கப்படவில்லை.

சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த கோவிலுக்கு வருகை புரிவதற்கும், திரும்ப செல்வதற்கும் தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்திடவும், கோவிலில் மண்டபம் கட்டிடவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். திருக்குளத்தை சிறந்த முறையில் சீரமைக்க உள்ளோம். அதிகரித்து வரும் பக்தர்களின் தேவைக்கேற்ப பல திட்டங்களை உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், விழாக்காலங்களில் தனி நபர்கள் வசூல் வேட்டை நடத்துவதையும் தடுத்திடவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை போலீஸ்துறை மற்றும் வருவாய்த் துறையினரோடு ஒருங்கிணைந்து இந்து சமய அறநிலைத்துறை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை. சந்திரசேகரன், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு பணி அலுவலர் ஜெ.குமரகுருபரன், ஆணையர் க.வீ.முரளீதரன், மண்டல இணை ஆணையர்கள் சி.லட்சுமணன், கி.ரேணுகா தேவி, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) ஹரிஹரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story