சம்பா சாகுபடி பணி தீவிரம்


சம்பா சாகுபடி பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Sep 2023 6:45 PM GMT (Updated: 14 Sep 2023 6:46 PM GMT)

நீடாமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் பகுதியில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 போகம் சாகுபடி

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் கோடை, குறுவை, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

சில இடங்களில் மின் மோட்டார் இல்லாத விவசாயிகள் மேட்டூரில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை நம்பி ஒரு போகம் மட்டும் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர்.

பருவமழை

இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கி சரியாக மழை பெய்யாததால் கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆண்டு ஆற்று நீரை நம்பி குறுவை மற்றும் சம்பா சாகுபடி பணி செய்த விவசாயிகள் இந்த ஆண்டு முழுமையாக விவசாய பணியை தொடர முடிய வில்லை.

இந்த ஆண்டு மின்மோட்டார் மூலம் சுமார் 16,500 ஏக்கரில் விவசாயிகள் கோடை சாகுபடி பணியை தொடங்கி அறுவடை செய்து பிறகு 34 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை தொடங்கினர். தற்போது நெல் மணிகள்அறுவடைக்கு தயாராகவும், சில இடங்களில் கதிர்கள் வந்துக் கொண்டிருக்கிறது.

சம்பா சாகுபடி

இந்த நிலையில் ஆற்றுநீர் மற்றும் நிலத்தடி நீரை கொண்டு நீடாமங்கலம் வேளாண் கோட்ட பகுதிகளான ஆதனூர், கானூர், பருத்திக்கோட்டை, மேலாளவந்தச்சேரி, அரிச்சபுரம், தேவங்குடி, சித்தாம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது நடவு பணிக்கு நாற்றங்கால் தயார் செய்து விதை விடும் பணிகளும், முன் கூட்டியே விதை விட்ட ஆடுதுறை 51 போன்ற ரகங்கள் நடுவதற்கு வயல்களை மண்வெட்டியை கொண்டு விவசாய தொழிலாளர்களை சமன்செய்து வருகின்றனர்.


Next Story