சம்பங்கி கிலோ ரூ.20-க்கு விற்பனை

கீரமங்கலத்தில் சம்பங்கி கிலோ ரூ.20-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
பூக்கள் உற்பத்தி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், செரியலூர், பனங்குளம், குளமங்கலம், பாண்டிக்குடி, நெய்வத்தளி, பெரியாளூர், மேற்பனைக்காடு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், அணவயல், மாங்காடு, வடகாடு மற்றும் திருவரங்குளம் வரை சுமார் 100 கிராமங்களில் பிரதான விவசாயம் பூக்கள் உற்பத்தி ஆகும். இந்தப்பகுதியில் மல்லிகை, கனகாம்பரம், முல்லை, காட்டுமல்லி, ரோஜா, அரளி, சம்பங்கி, செண்டி உள்ளிட்ட அனைத்து வகை பூக்களும் உற்பத்தி செய்யப்படுகிறது. கஜா புயலில் பாதிப்பு ஏற்பட்டு மீண்டும் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பூக்கள் கீரமங்கலத்தில் உள்ள கமிஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளுக்கு மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 10 டன் வரை பூக்கள் விற்பனைக்காக வருகிறது. இந்த பூக்களை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
குப்பையில் பூக்கள்
சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் விழாக்கள் இல்லாததால் பூக்கள் விற்பனை மந்தமடைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாளும் விற்பனையாகாத பூக்களை குப்பையில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல விவசாயிகள் உற்பத்தி செய்து கமிஷன் கடைகளுக்கு கொண்டு வரும் பூக்களின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த சில மாதங்களில் ஒரு சில முகூர்த்த நாட்கள் தவிர மற்ற நாட்களில் சம்பங்கி பூக்கள் கிலோ ரூ.10, ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஆவணி கடைசி சுப முகூர்த்த நாளுக்காக சம்பங்கி பூ கிலோ ரூ.400-க்கு விற்ற நிலையில் நேற்று ரூ.20-க்கு விற்பனை ஆனது. அப்படியும் விற்பனை செய்ய முடியாமல் குப்பையில் கொட்டுகிறார்கள். பூ பறிக்கும் கூலிக்கு கூட பூக்கள் விற்பனை செய்ய முடியவில்லை என்று விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். அதே போல கடந்த வாரம் ரூ.1,000-க்கு விற்ற மல்லிகைப் பூ கிலோ ரூ.200, முல்லை பூ ரூ.200-க்கும் விற்பனை ஆனது. தொடர்ந்து விலை குறைவதால் விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுகிறது. பூக்கள் விலை குறைந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்.






