அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயன் தருமா?


அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது  அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம்  மாணவர்களுக்கு பயன் தருமா?
x

அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வருகிறது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் மாணவர்களுக்கு பயன் தருமா?

சேலம்

பள்ளிக்கல்வி அடித்தளம் தந்தாலும், உயர்கல்விதான் மாணவ, மாணவிகளின் எதிர்காலத்துக்கு ஏணியாக அமைகிறது. 12-ம் வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள், உயர்கல்வியை பார்த்து, பார்த்து தேர்வு செய்து படிக்கிறார்கள்.

அவ்வாறு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு படிக்கும்போதே தொழில் சார்ந்த வழிகாட்டுப்பாதையை உருவாக்கி தரவேண்டும் என்ற நோக்கில், அரசு தற்போது திட்டமிட்டு வருகிறது.

புதிய பாடத்திட்டம்

அதன் ஒரு பகுதியாக கொண்டு வரப்பட்டது தான், முதல்-அமைச்சரின் கனவு திட்டமான 'நான் முதல்வன்' திட்டம். அதன் தொடர்ச்சியாக பல்வேறு மாற்றங்களையும் உயர்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் என்ஜினீயரிங் மாணவர்களை தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் இணைக்கப்பட இருக்கிறார்கள்.

உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கடந்த மாதம் உயர் அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோருடன் ஒரு ஆய்வுக்கூட்டத்தை நடத்தினார். அப்போது 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் உயர்கல்வி வளர்ச்சிக்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன.

குறிப்பாக பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்த விவகாரம் முக்கியமாக பேசப்பட்டது. மாணவர்களை வேலை பெறுவோராக மட்டுமல்லாமல், வேலை தருபவர்களாகவும் மாற்றும் விதத்தில் புதிய பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்றும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த கல்வி ஆண்டில்...

அதன்படி, பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றன. இதுதொடர்பாக புதிய பாடத்திட்ட வரைவு அறிக்கை தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது விரைவில் பல்கலைக்கழக துணைவேந்தர்களிடம் வழங்கப்பட இருக்கிறது.

இந்த கூட்டத்தின் நிறைவில் அமைச்சர் பொன்முடி பேசும்போது, 'அறிவியல், கலை, மனிதநேயம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளும் திறன் சார்ந்ததாக இருக்கும். துணைவேந்தர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் பாடத்திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் பின்பற்றப்படும்' என்றார்.

குறிப்பாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்களில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களை கொண்டுவருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அடுத்த கல்வியாண்டில் இருந்து நடைமுறைக்கு வர இருக்கிறது.

13 பல்கலைக்கழகங்கள்

தமிழ்நாட்டில் உள்ள சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்பட 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதனுடன் இணைப்பில் இருக்கும் கல்லூரிகளில் இந்த பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்.

இதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அந்த பாடங்களுடன் திறன், கணினி சார்ந்த புதிய தோற்றத்தில் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன.

இந்த திருத்தப்பட்ட பாடத்திட்டங்கள் அமலுக்கு வந்தால் மாணவர்களுக்கு பயன்தரும் வகையில் இருக்குமா? என்பது பற்றி பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

வரவேற்கத்தக்கது

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன்:-

தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்துக்கும் பாடத்திட்டங்கள் மாறுபடுகிறது. இந்தநிலையில் உயர்கல்வித்துறை வளர்ச்சிக்காக முதல்-அமைச்சரின் நான் முதல்வன் திடத்தின் மூலம் அடுத்த கல்வியாண்டு முதல் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்களின் திறன் மேம்படுத்தப்படும். ஒரே பாடப்பிரிவு சார்ந்த பட்டப்படிப்புகளுக்கு 70 சதவீதம் வரை பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். மற்ற 30 சதவீதம் மாணவர்களின் நலன் சார்ந்த பாடங்கள் சேர்க்கப்படும். இதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான தகுதி உறுதியாக வழங்கப்படும்.

எடப்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன்:-

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் அமல்படுத்துவது வரவேற்கத்தக்கது. ஒருமுகப்படுத்தப்படும் இந்த பாடத்திட்டத்தினால் எதிர்வரும் காலத்தில் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் சமப்படுத்தப்படும். குறிப்பாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாணவர்கள், மற்றும் பேராசிரியர்கள் செல்லும் போது இந்த புதிய பாடத்திட்டம் ஒரு வரப்பிரசாதம். மேலும் இந்த புதிய பாடத்திட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள சிறப்பு அம்சங்களை துணைப்பாடங்களாக சம்பந்தப்பட்ட கல்லூரிகளை சேர்த்து கொள்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

வேலைவாய்ப்பு திறன்

சேலம் அரசு கலைக்கல்லூரி பொருளியல்துறை இணை பேராசிரியர் அசோகன்:-

உயர்க்கல்வித்துறை பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது நல்லது தான். ஆனால் இது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பாடங்களுக்கு மட்டும் தான் பொருந்தும். மற்ற துணை பாடங்களுக்கு பொருந்த முற்றிலும் வாய்ப்பில்லை. ஏனென்றால் அந்தந்த வட்டார பகுதியின் பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடங்களில் சேர்க்க வேண்டும். அதை படிக்கும் போது தான் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும்.

சேலம் அண்ணபூர்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் ஏ.அன்புச்செழியன்:-

பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது வரவேற்கத்தக்கது. இதை பல்வேறு நிலைகளில் செயல்படுத்தினால் கண்டிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிலும் திறன் மேம்பாட்டையும் பாடத்திட்டத்தோடு இணைக்கும் போது நிச்சயம் வெற்றி பெறும். வெறும் பட்டப்படிப்பை மட்டும் வேலைவாய்ப்புக்கு தகுதியாக அவர்கள் கருதுவதில்லை. வேலைவாய்ப்பு திறனை கண்டிப்பாக எதிர்பார்க்கிறார்கள். மாணவர்களும் அதை எப்படியாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் தான் இருக்கிறார்கள்.

பயனுள்ளதாக இருக்கும்

ஆத்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி காயத்திரி:-

பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வருவது சரியான ஒன்றாகும். இப்போது உள்ள எங்களை போன்ற மாணவர்களுக்கு ஏற்ற ஆர்வத்தை தூண்டும் வகையிலான பாடத்திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். படிக்கும் போதே வேலைவாய்ப்பை அறியும்படி திறன் சார்ந்த திட்டங்களையும் சேர்ப்பதாக கூறி இருக்கிறார்கள். நிச்சயம் அது மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாளுக்கு நாள் கல்வியின் மீதான ஆசை அதிகரிக்கும். இன்னும் அதிகம் படிக்க வேண்டும் என்ற தூண்டுதலை கொடுக்கும்.

தாரமங்கலத்தை சேர்ந்த கல்லூரி பேராசிரியர் கண்ணன்:-

அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் திறன் அதிகரிக்கும். திறமையான வல்லுனர்களால் தற்போது உள்ள கால சூழலுக்கு ஏற்றாற்போல் பாடத்திட்டங்களை அமைத்து கொடுத்தால் மாணவர்களுக்கு சிறந்ததாக அமையும். மேலும் அவர்கள் கல்வியை எளிமையாக கற்று கொள்வார்கள். ஆர்வத்துடன் படிப்பார்கள். மேலும் போட்டித்தேர்வுகளில் பங்கேற்க மாணவர்களுக்கு எளிதாக இருக்கும்.

மாற்றம் தேவை

சேலம் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி:-

பாடத்திட்டங்கள் மாற்றம் தேவைதான். அதற்கு முன்பு அதை கற்றுத் தரும் ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பங்கள் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டு கொண்டே வருகிறது. எனவே அதற்கு தேவையான ஆய்வகங்கள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் செய்துகொடுக்க வேண்டும். தமிழக அரசு பாடத்திட்டங்களை மாற்றுவதற்கு முன்பாக பல்வேறு கல்வி வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து இருக்கிறது.

உதாரணமாக 'நான் முதல்வன்' திட்டம் போன்றவை வரவேற்கத்தக்க ஒன்று. பாடத்திட்டங்களில் அதிரடி மாற்றங்கள் இல்லாமல், அடிமட்ட அளவில் இருந்து மாற்றங்கள் கொண்டு வந்து, தற்போதைய மேம்பாடுகளுக்கு ஏற்றவாறு உருவாக்கலாம். மாணவர்கள் படிக்கும் படிப்புக்கும், வேலைக்கான தேவைக்குமான இடைவெளி தற்போது அதிகமாக இருக்கிறது. அதனை பூர்த்தி செய்யும் வகையிலான பாடத் திட்டங்களை உருவாக்குவது சிறந்ததாக இருக்கும். அதற்கு ஏற்றாற்போல் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும், அது சிறந்ததாகத் தான் இருக்கும். குறிப்பாக சுய கற்றல் என்பது மாணவர்களுக்கு இன்று மிக அவசிய தேவையாக உள்ளது. வெளிநாடுகள் இதில் வெற்றி கண்டதால்தான் அங்கு உயர்கல்வி சிறப்பாக உள்ளது. அந்த மாற்றத்தை பள்ளிக்கல்வியில் இருந்து ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கருத்துகள் தெரிவிக்க ஒரு மாதம் அவகாசம்

பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டம் மாற்றம் செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பது தமிழ்நாடு உயர்கல்வி மன்றம்தான். தற்போது இந்த மன்றம் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாதிரி பாடத்திட்டங்களை வடிவமைத்து தயாராக வைத்துள்ளது. இதனை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளையும் கேட்டுப்பெற இருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத்தலைவர் ராமசாமியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தால் மாதிரி பாடத்திட்டங்கள் தயார்நிலையில் இருக்கின்றன. அடுத்த வாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இதனை அடிப்படையாக வைத்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். நாங்கள் அனுப்பும் பாடத்திட்டங்களில் 25 சதவீதம் வரை அவர்களுக்கு தேவையிருப்பின், அதில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

மீதமுள்ள 75 சதவீதம் உயர்கல்வி மன்றம் கொடுக்கும் பாடத்திட்டங்களை கொண்டதாகவே இருக்கும். இதுபற்றிய கருத்துகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் ஒரு மாதத்துக்குள் எங்களுக்கு தெரிவிக்க அவகாசம் வழங்கப்படும். பின்னர், அவர்கள் இந்த பாடத்திட்டங்களை அவரவர் கல்வி கவுன்சிலில் முன்வைத்து, செனட், சிண்டிகேட் கூட்டம் வாயிலாக நடைமுறைப்படுத்துவார்கள்.

2023-24-ம் கல்வியாண்டில் இந்த புதிய பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறோம். அதேபோல், பல்கலைக்கழகங்கள் கொண்டு வரும் பாடத்திட்டங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம்பெற்றிருந்தால், அதில் தலையிட்டு ஒழுங்குப்படுத்த எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

===


Next Story