காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது


காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது
x

காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது

தஞ்சாவூர்

திருக்காட்டப்பள்ளி அருகே பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்ககூடாது என கலெக்டரிடம், விவசாயிகள் வலியுறுத்தினர்.

கலெக்டர் ஆய்வு

திருக்காட்டுப்பள்ளி அருகே பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்க உத்தேசிக்கப்பட்டு இருந்தது.இதற்கு எதிராக விவசாயிகள் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை தொடா்ந்து பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படவில்லை தற்போது மணல் குவாரி அமைப்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி நேற்று தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரடியாக பவனமங்கலம் கிராமத்தில் சென்று காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பவனமங்கலம் மணல் குவாரி அமைய உள்ள இடத்தை காவிரி ஆற்றில் இறங்கி நடந்து சென்று கலெக்டர் பார்வையிட்டார்.

விவசாயிகள் மனு

அப்போது பவனமங்கலம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சார்பில் வக்கீல் ஜீவகுமார், பாலகணேசன் மற்றும் பொன்னு ராமன் ஆகியோர் கலெக்டரிடம், பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என வலியுறுத்தி மனு அளித்தனர்.

இந்த மனுவில் கூறியிருப்பதாவது:- பவனமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு உயிர்நாடியாக இருப்பது காவிரி குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு காவிரி நீரே ஆதாரமாக உள்ளது. காவிரி ஆற்றில் நீர் இருந்தால் தான் இங்குள்ள ஆழ்துளை கிணறுகளில் நீர் கிடைத்து விவசாயம் நடைபெறும்.

மணல்குவாரி அமைக்க கூடாது

பவனமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு பாசன வசதி அளிக்கும் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்.

கடந்த 2018 -ம் ஆண்டு பவனமங்கலம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் மணல் குவாரி அமைக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தங்களுக்கு(கலெக்டருக்கு)அனுப்பப்பட்டுள்ளது .எனவே பவனமங்கலம் கிராமத்தில் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதை கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பரிசீலனை

விவசாயிகளிடமிருந்து மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார். இந்த ஆய்வின் போது நீர்வள ஆதாரத்துறை, கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

2018-ம் ஆண்டு பவனமங்கலம் காவிரி ஆற்றில் மணல் குவாரி அமைக்கப்படுவது குறித்த அறிவிப்பு பலகையும்,மணல் குவாரிக்காக அடையாளம் இடப்பட்டு நடப்பட்ட சிமெண்டு கம்பங்களும் காவிரி ஆற்றில் அப்படியே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story