இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை


இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை
x

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பகுதியில் இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் பகுதியில் இரவு நேரங்களில் தொடரும் மணல் கொள்ளை குறித்து போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மனு

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ளது பெரியபட்டினம். இந்த ஊரில் அமைந்துள்ள புகழ் வாய்ந்த அழகுநாயகி அம்மன் திருக்கோவில் தலைவர் குப்புச்சாமி தலைமையில் நிர்வாகக்குழுவினர் நேற்று காலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

பெரியபட்டினம் அழகுநாயகி அம்மன் கோவில் வளாக பகுதியில் இரவு நேரங்களில் தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குழிகளில் சாக்கு மூடைகளில் மணல் அள்ளி வைத்து ஆட்டோ, சரக்கு வாகனங்களில் மணலை எடுத்து சென்று வருகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் பாதாள குழிகளாக மாறிவிட்டன. மணல் கொள்ளை குறித்து போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பலமுறை புகார் செய்தும் பயனில்லை. மணல் கொள்ளை ஒருபுறம் நடந்து வந்த வேளையில் தற்போது போதை வஸ்துகளை பயன்படுத்தி கோவிலின் புனிதத்தை கெடுத்து வருகின்றனர்.

கண்காணித்து நடவடிக்கை

இந்தநிலையில் மர்ம நபர்கள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கு உள்ளிட்ட பொருட்களை திருட முயன்று வருகின்றனர். மணல் கொள்ளையை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு கோவில் வளாக பகுதியில் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, பெரியபட்டினம் பகுதியில் மணல் திருட்டு குறித்து தொடர் புகார்கள் வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு அப்பகுதிக்கு கூடுதல் போலீசார் வழங்கி ரோந்து பணியை தீவிரப்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பெரியபட்டினம் பகுதியில் தனிப்படையினர் மூலமும் மணல் திருட்டு குறித்து கண்காணித்து முற்றிலுமாக தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story