பழையாறு துறைமுகத்தில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு


பழையாறு துறைமுகத்தில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு
x

பழையாறு துறைமுகத்தில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு

மயிலாடுதுறை

கொள்ளிடம்

மீன் ஏலக்கூடம், படகு அணையும் தளம் சேதம் அடைந்துள்ளன. பழையாறு துறைமுகத்தில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழையாறு துறைமுகம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு கிராமம் உள்ளது.கொள்ளிடம் ஆறு வங்கக்கடலில் கலக்கும் இடமாக இருப்பதால் இப்பகுதியில் இயற்கை துறைமுகமாக பழையாறு துறைமுகம் விளங்கி வருகிறது. துறைமுகத்தை 1982-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். மேம்படுத்தி படகுகள் அணையும் தளங்களை அமைத்தார்.மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்ப்பதற்கும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும். தாங்கள் பிடித்து வரும் மீன்களை பத்திரமாக இறக்குவதற்கும் இந்த துறைமுகத்தை பயன்படுத்தி வந்தனர்.

ஏலக்கூடம், படகு அணையும் தளம் சேதம்

துறைமுகத்தின் மூலம் கொடியம் பாளையம், மடவாமேடு, கூழையார், திருமுல்லைவாசல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும், மீன்களை இறக்குவதற்கும் பழையாறு துறைமுகத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2010-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் ரூ.34 கோடி மதிப்பில் பழையாறு மீன்பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் பல்வேறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார சீர்கேடு

இதற்கு பிறகு 10 ஆண்டுகளாக எந்த பராமரிப்பு பணியும் செய்யப்படவில்லை. இதனால் மீன் ஏலக்கூடம், உயர் கோபுர விளக்கு, ஐஸ் பிளாண்ட், கருவாடு உலரும் தளம் மற்றும் படகு அணையும் தளம் ஆகிய அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. பழையாறு துறைமுகத்தில் மீன் கழிவு நீர் வடிவதற்கு சரியான வடிகால் வசதி இல்லை. இதனால் கழிவு நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசி வருகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.இந்த துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மீன்கள் ஏற்றுமதி

இதுகுறித்த மீனவர்கள் கூறியதாவது:-

பழையாறு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து முதன் முதலில் 20 படகுகளுடன் மீன்பிடி பணியை தொடங்கினோம். தற்போது பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் 300-க்கும் மேற்பட்ட விசை படகுகள், 400 நாட்டுப்படகுகள் உள்ளன.

இந்த துறைமுகத்தை நம்பி 5 ஆயிரம் மீனவர்கள் உள்ளனர். இங்கு பிடிக்கப்படும் மீன்கள் வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேம்படுத்த வேண்டும்

துறைமுகத்தில் மீன் ஏலக்கூடங்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. பழையாறு துறைமுகத்தில் படகுகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்வதால் மீனவர்கள் மழைக்காலங்களில் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே மீனவர்கள் நலன் கருதி பழையாறு துறைமுகம் அருகில் உள்ள பக்கிங் கால்வாயில் படகு அணையும் தளம் அமைக்க கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வடிகால் வசதி

துறைமுகத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சுனாமியின் போது தொண்டுநிறுவனங்கள் சார்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்து உள்ளது. அதனை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடுதலாக மீன்வலை பின்னும் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனவர்களுக்கு வழங்க வேண்டிய டீசலுக்கு கூடுதல் மானியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story