சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ அதிகாரிகள்...!


சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: காவல் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிஐ அதிகாரிகள்...!
x
தினத்தந்தி 11 Aug 2022 10:22 AM GMT (Updated: 11 Aug 2022 10:22 AM GMT)

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் காவல் நிலையத்தில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தான்குளம்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை-மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் கடந்த 2019-ம் ஆண்டு ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது சிபிஐ அதிகாரிகள் அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் 10 போலீசாரை கைது செய்து மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு 3 சொகுசு வாகனங்கள் மற்றும் ஒரு வஜ்ரா வாகனத்தில் வந்த சிபிஐ அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்குள் சென்று சீல் வைக்கப்பட்ட எஸ்.ஐ ரகுகணேன் அறையில் இருந்த சீலை அகற்றி அதில் இருந்த வழக்கு சம்பந்தமான முக்கியமான ஆவணங்களை பறிமுதல் செய்து, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை கொடூரமாக தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட மர டேபிளையும் பறிமுதல் செய்து சிபிஐ அதிகாரிகள் கொண்டு சென்றனர்.

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை புரிந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றுள்ளதால் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story