பள்ளி மாணவி திடீர் சாவு


பள்ளி மாணவி திடீர் சாவு
x

பள்ளி மாணவி திடீர் உயிரிழந்தார்.

திருச்சி

சோமரசம்பேட்டை:

பள்ளி மாணவி

சோமரசம்பேட்டை அருகே உள்ள இனியானூர் மேல தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 45). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி காயத்ரி(36). இவர்களுக்கு பவதாரணி(14) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். பவதாரணி சோழங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த 10 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து பவதாரணியை அவரது பெற்றோர் தினமும் சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று வந்துள்ளனர்.

மூச்சுக்காற்று வந்ததாக...

வழக்கம்போல் நேற்றும் பவதாரணியை அந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவருக்கு நரம்பு ஊசி செலுத்தப்பட்டதாகவும், இதையடுத்து பவதாரணி வாந்தி எடுத்த நிலையில் அங்கேயே மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த டாக்டர், பவதாரணி இறந்து விட்டதாக கூறியதால், அவரை பெற்றோர் வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பவதாரணியின் உடலை சுற்றி உறவினர்கள் அழுது கொண்டிருந்தபோது, திடீரென பவதாரணிக்கு லேசாக மூச்சுக்காற்று வந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த உறவினர்கள் உடனடியாக பவதாரணியை சிகிச்சைக்காக திருச்சி தென்னூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், பவதாரணி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது பற்றி தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார், பவதாரணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் பவதாரணியின் சாவுக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பள்ளி மாணவி திடீரென இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story