பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்


பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 22 March 2023 6:45 PM GMT (Updated: 22 March 2023 6:45 PM GMT)

கோவை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பேரூர்,

கோவை அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பள்ளி மாணவி

கோவை மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். இவரது தாய் மனநலம் பாதிக்கப்பட்டவர். தந்தை மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுமியின் வீட்டின் அருகே திருநங்கை ஒருவர் வசித்து வந்தார். சம்பவத்தன்று சோகமாக இருந்த சிறுமியிடம், திருநங்கை சென்று பேசினார். அப்போது ஏன் சோகமாக இருக்கிறாய் என்று கேட்டார்.

அப்போது அந்த சிறுமி அழுதுகொண்டே தன்னை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார்.

பாலியல் பலாத்காரம்

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த திருநங்கை, குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள், பேரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சிறுமியின் வீட்டுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை 15 சிறுவன் உள்பட 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்தது உள்பட பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.

இதுகுறித்து மகளிர் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாது:-

சிறுமியின் வீட்டின் அருகே மதன் (வயது 27) என்பவர் வசித்து வருகிறார். பெயிண்டரான இவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், இதுகுறித்து வெளியில் யாரிடம் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியதாகவும் தெரிகிறது.

3 பேர் போக்சோவில் கைது

இதற்கிடையில் சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்த 15 வயது சிறுவனும் ஆசைவார்த்தை கூறி சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும், அதே பகுதியைச் சேர்ந்த சதாசிவம் (48) என்பவரும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மதன், சதாசிவம், 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் சிறுவனை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர். மற்ற 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


Next Story