பள்ளி மாணவி பலாத்காரம்: தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு


பள்ளி மாணவி பலாத்காரம்:  தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை  கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Oct 2022 6:45 PM GMT (Updated: 27 Oct 2022 6:45 PM GMT)

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர்

கடலூர் அருகே உள்ள கீரப்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சுந்தர்ராஜ் (வயது 28), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் 16 வயதுடைய மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.

இதுகுறித்து அறிந்த சுந்தர்ராஜ், கடந்த 11.10.2020 அன்று மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். அப்போது செல்லும் வழியில் இருந்த கோவிலில் வைத்து மாணவிக்கு தாலி கட்டிய சுந்தர்ராஜ், குறிஞ்சிப்பாடிக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு விடுதியில் வைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ரூ.5 லட்சம் இழப்பீடு

இதுகுறித்து மாணவி, நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி நீதிபதி எழிலரசி தனது தீர்ப்பில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தர்ராஜிக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு சமூக நலத்துறையின் கீழ் உள்ள நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.


Next Story