விழுப்புரம் அருகே ரெயில் மோதி பள்ளி மாணவர் சாவு


விழுப்புரம் அருகே ரெயில் மோதி பள்ளி மாணவர் சாவு
x
தினத்தந்தி 22 July 2023 6:45 PM GMT (Updated: 22 July 2023 6:45 PM GMT)

விழுப்புரம் அருகே ரெயில் மோதி பள்ளி மாணவர் உயிாிழந்தாா்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் ஸ்ரீதரன் (வயது 17). இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு மாணவர் விடுதியில் தங்கி திண்டிவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவருடைய பெற்றோர் செங்கல்பட்டில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். மாணவர் ஸ்ரீதரன், பள்ளி வார விடுமுறையின்போது விழுப்புரம் அருகே வெண்மணியாத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று வந்தார். அதுபோல் தற்போது சனி, ஞாயிறு பள்ளி விடுமுறையையொட்டி மாணவர் ஸ்ரீதரன் நேற்று முன்தினம் மாலை வெண்மணியாத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.

ரெயில் மோதி சாவு

இந்நிலையில் நேற்று காலை இயற்கை உபாதை கழிப்பதற்காக ஸ்ரீதரன், வி.கொத்தமங்கலம் ரெயில்வே தண்டவாள பகுதியில் நடந்து சென்றார். அவருக்கு சரிவர காது கேட்காத நிலையில் அவ்வழியாக காட்பாடியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரெயில் வரும் சத்தம் கேட்காததால் அவர் மீது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஸ்ரீதரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story