பள்ளி மாணவர்கள் மோதல்


பள்ளி மாணவர்கள் மோதல்
x
தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:46 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்டனர்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்திக்குப்பத்தில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் ஒரு மாணவருக்கும், அதே பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கும் நேற்று முன்தினம் அரசு பஸ்சில் படியில் நின்று பயணம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக மதிய உணவு இடைவெளியில் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்த மாணவர்கள், பள்ளியின் அருகில் உள்ள பெட்ரோல் பங்க்கில் மோதிக்கொண்டனர். ஒருவர் மீது ஒருவர்கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.

சமாதானப்படுத்திய மக்கள்

பள்ளி சீருடையில் மாணவர்கள் மோதிக்கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் ஓடிவந்து, மாணவர்களை சமாதானப்படுத்தினர். மேலும் பள்ளிக்கூடத்திற்கு சென்று படியுங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இந்த மோதலில் பிளஸ்-1 மாணவர், தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர், திருவெண்ணெய்நல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார், மாணவர்களுக்கு அறிவுரை கூறி பெற்றோர்களை வரவழைத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

4 மாணவர்கள் மீது வழக்கு

இதனிடையே காயமடைந்த மாணவர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டார்.

இ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story