தண்டையார்பேட்டையில் ரோந்து பணியின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சுற்றிவளைத்து தாக்கிய பள்ளி மாணவர்கள்


தண்டையார்பேட்டையில் ரோந்து பணியின் போது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சுற்றிவளைத்து தாக்கிய பள்ளி மாணவர்கள்
x

தண்டையார்பேட்டையில் ரோந்து பணியின் போது விசாரணை செய்ய முயன்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சுற்றி வளைத்து சரமாரி தாக்கிய 4 பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ரோந்து பணி

கொடுங்கையூர் மூலக்கடை அடுத்த அண்ணா நகர் 5-வது அவென்யூவைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 56). இவர் ஆர்.கே.நகர் போலீசில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை சுந்தரம்பிள்ளை நகர் வைத்தியநாதன் மேம்பாலம் அருகே சாதாரண உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மேம்பாலம் கீழே சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த 4 பேரை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் அழைத்து விசாரணை நடத்தியபோது, போதையில் இருந்த அந்த கும்பல் பாலமுருகனிடம் ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்

பின்னர் அந்த 4 பேரும் சேர்ந்து சுற்றிவளைத்து சப்-இன்ஸ்பெக்டரை பாலமுருகன் திடீரென கற்களாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாலமுருகனுக்கு முகத்தில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டதில், மூக்கு தண்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வலியில் துடித்த அவர் அலறினார். இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் சக்திவேல் நேரில் சந்தித்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகனுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ஆர்.கே.நகர் போலீசார் தனிப்படை அமைத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களை கைது செய்தனர்.

விசாரணை

மேலும் போலீசார் விசாரணையில், அவர்கள் 4 பேரும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதும், 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மாணவர்கள் 4 பேரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ரோந்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை 4 பேர் கொண்ட பள்ளி மாணவரகள் தாக்கிய சம்பவம் போலீசார் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் பகுதியில் கஞ்சா போதையில் இருந்த வாலிபர்கள் சிலர் ரோந்து சென்ற போலீஸ்காரர் ஒருவரை கத்தியை காட்டி மிரட்டி விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story