ஆதித்தனார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி போட்டி


ஆதித்தனார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி போட்டி
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளின் அறிவியல் தொழில்நுட்பத்திறனை மேம்படுத்தும் வகையில், 'பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான உத்திகள்' என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி போட்டிகள், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். அகத்தர உறுதிக்குழு தலைவர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் வரவேற்று பேசினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். இதில் பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். மேலும் ஆதித்தனார் கல்லூரி கணினி அறிவியல் துறை சார்பில் கணினி உதிரிபாகங்கள், மென்பொருள் செயல்பாடுகளும், வேதியியல் துறை சார்பில் வேதிவினைகள், வேதிப்பொருட்களின் தன்மைகளும், விலங்கியல் துறை சார்பில் விலங்குகளின் பதப்படுத்தப்பட்ட மாதிரிகளும், கணிதவியல் துறை சார்பில் கணித கோட்பாடுகளின் செயல்விளக்க மாதிரிகளும், தாவரவியல் துறை சார்பில் காளான் வளர்ப்பு, தாவரங்களின் வளர்ப்பு, கடல் பாசிகளின் பயன்கள் குறித்தும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

ஆதித்தனார் கல்லூரி இயற்பியல் துறைத்தலைவர் பாலு, கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி வேதியியல் துறை பேராசிரியர் ஜான்சிராணி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி பேராசிரியர் உமா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டு சிறந்த அறிவியல் படைப்புகளை தேர்வு செய்தனர். சிறந்த அறிவியல் படைப்புகளை உருவாக்கிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி மாவட்ட அலுவலர் குருநாதன் பரிசு, சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு மேல்நிலைப்பள்ளி, காயல்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தண்டுபத்து அனிதாகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முைறயே முதல் 3 இடங்களை பிடித்தது. சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் பள்ளி, பெரியதாழை லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதேவி, அமைப்பு செயலாளர் அபுல்கலாம் ஆசாத் மற்றும் பேராசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story