'சவர்மா' சாப்பிட்ட 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம்; ஓட்டலுக்கு 'சீல்'


சவர்மா சாப்பிட்ட 13 மாணவர்கள் வாந்தி, மயக்கம்; ஓட்டலுக்கு சீல்
x

நாமக்கல்லில் ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 13 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

நாமக்கல்

13 மாணவர்கள்

நாமக்கல்லில், பரமத்தி சாலையில் தனியார் ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகள் 10 பேர் சவர்மா, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு வகைகளை சாப்பிட்டதாக கூறப்படுகிறது. மேலும் விடுதியில் தங்கியிருந்த சில மாணவர்களுக்கும் சவர்மாவை பார்சல் வாங்கிச் சென்றதாக தெரிகிறது.

விடுதியில் இருந்த மாணவர்களும் இரவு 10 மணியளவில் சவர்மாவை சாப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் திடீரென 6 மாணவிகள், 7 மாணவர்கள் என மொத்தம் 13 பேருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் மற்றும் காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன.

கலெக்டர் நலம் விசாரித்தார்

இதையடுத்து அவர்கள் அனைவரும் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் உள்ள காய்ச்சலுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர்கள் ஓட்டலில் என்ன உணவை சாப்பிட்டார்கள்? என கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

ஓட்டலுக்கு 'சீல்'

அப்போது அங்கு குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அவர் பார்வையிட்டார். எத்தனை நாட்களாக இதில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து உணவகத்தின் உரிமையாளரிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் உடல் நல பாதிப்பிற்கு உள்ளான மாணவர்கள் என்ன உணவை சாப்பிட்டார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து ஓட்டலில் உள்ள பொருட்கள் அனைத்தையும் அழிப்பதோடு, கடைக்கு நோட்டீஸ் வழங்கி 'சீல்' வைக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டார்.

இதையடுத்து உணவகத்தில் உள்ள இறைச்சிகள் மற்றும் உணவுப் பொருட்களை அழித்து ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Next Story