பாரம்பரிய குறுவை நெல் விதைகள் வினியோகம்


பாரம்பரிய குறுவை நெல் விதைகள் வினியோகம்
x

பாரம்பரிய குறுவை நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்


திருப்புல்லாணி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் பாரம்பரிய நெல் ரகமான 60-ம் குறுவை நெல் விதைகள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தெரிவித்ததாவது:- 60-ம் குறுவை தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இந்த நெல் வகை 60 முதல் 75 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. 60-ம் குறுவையின் அரிசி, சிவப்பு நிறமுடைய நடுத்தர ரகமாகும். திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டாரத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை மூலம் பாரம்பரிய நெல் ரகங்களின் விதை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் நெல் விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயி ஒருவருக்கு அதிகபட்சமாக ஏக்கருக்கு 20 கிலோ விதை வழங்கப்படும். மேலும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார். எனவே பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கு ஆர்வமுள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை, பட்டா மற்றும் சிட்டா நகலுடன் திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி பாரம்பரிய நெல் விதைகளை மானிய விலையில் பெற்று சாகுபடி செய்து பயன்பெறலாம். என்று தெரிவித்தார்.


Next Story