சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் திருவிழா


சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் திருவிழா
x

திருக்கடையூர் அருகே மாமாகுடியில் உள்ள சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை

திருக்கடையூர்

திருக்கடையூர் அருகே உள்ள மாமாகுடி கிராமத்தில் சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். அதேபோல, இந்த ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதனையடுத்து நேற்று தீமிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பெருமாள் கோவில் குளத்தில் இருந்து கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க அக்ரஹாரம் வழியாக பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.

தீக்குண்டம் இறங்கிய பக்தர்கள்

பின்னர், சீதளாதேவி பரமேஸ்வரி மாரியம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

தொடர்ந்து கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவையொட்டி பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story