சரக்கு வாகனத்தில் கடத்திய 48 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது


சரக்கு வாகனத்தில் கடத்திய 48 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் - 2 பேர் கைது
x

கோத்தகிரி அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 48 மூட்டை ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி,

கோத்தகிரி அருகே உள்ள ஆடத்தொரை கிராமத்திற்குச் செல்லும் சாலையில் ஒரு வாகனத்தில் ரேஷன் அரிசிகள் கடத்தி வருவதாக கோத்தகிரி வருவாய் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் வருவாய் ஆய்வாளர் தீபக் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காத்துக்குளி கிராமத்தில் இருந்து ஆடத்தொரை செல்லும் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்மற்றும் சரக்கு வேனில் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை 2 பேர் ஏற்றிக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர்களை கைது செய்த அதிகாரிகள் அரிசி மூட்டைகளை கைப்பற்றினர்.

மேலும், இது குறித்து கோத்தகிரி வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு அவர்கள் தகவல் அளித்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜூனேஷ்( வயது 29)கவியரசன்,(வயது 43) .மேலும் ரேஷன் அரிசியை கூடலூரைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகன் ஜோபின் என்பவருக்காக கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

மேலும் சற்று நேரத்திற்கு முன் இதே போல ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு மற்றொரு வாகனம் கூடலூருக்கு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தடுப்பு சப் இன்ஸ்பெக்டர் தியாகராஜன், காவலர் தஸ்லீம், வட்ட வழங்கல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பிடிபட்ட 2 பேரையும் ,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார், சரக்கு வாகனம், மற்றும் அதிலிருந்த 48 மூட்டை ரேஷன் அரிசி ஆகியவற்றை கைப்பற்றினர்.

மேலும் பிடிபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன், கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எந்தெந்த நியாய விலைக் கடைகளில் இருந்து வாங்கப்பட்டது என முழுமையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே ஜூனேஷ் மற்றும் ஜோபின் ஆகியோர் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கோத்தகிரியில் இருந்து கூடலூருக்கு 1600 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றபோது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story