காரிமங்கலம் அருகே வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
காரிமங்கலம் அருகே வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தர்மபுரி:
காரிமங்கலம் அருகே வேனில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
தர்மபுரி குடிமை பொருள் வழங்கல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவுபடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில் முருகன், முரளி, ராமச்சந்திரன், முருகன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று தர்மபுரி- காரிமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அகரம் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வேன் டிரைவர் போலீசாரை பார்த்தவுடன் சாலையோரத்தில் வேனை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வேனில் சோதனை நடத்தினார்கள். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 62 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
ரேஷன் அரிசி பறிமுதல்
இதையடுத்து போலீசார், வேனுடன் 3 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தர்மபுரி நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை கடத்த முயன்ற நபர்கள் மற்றும் டிரைவா் குறித்து குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.