மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்:தி.மு.க.-அ.தி.மு.க.வினர் 12 பேர் போட்டியின்றி தேர்வு


மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்:தி.மு.க.-அ.தி.மு.க.வினர் 12 பேர்  போட்டியின்றி தேர்வு
x
தினத்தந்தி 14 Jun 2023 7:30 PM GMT (Updated: 14 Jun 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 12 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்

தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டப்பணிகளை தேர்வு செய்யும் பொருட்டு மாவட்ட திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்திற்கு தேவையான பணிகளை தேர்வு செய்து அந்த விவரங்களை மாவட்ட திட்டக்குழு அரசுக்கு அனுப்பி வைக்கும். ஊரகப்பகுதிக்கு 10 உறுப்பினர்களும், நகர பகுதிக்கு 2 உறுப்பினர்களும் என மொத்தம் 12 மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 7-ந் தேதி தர்மபுரி மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் தொடங்கியது. கடந்த 10-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இந்த வேப்பமனுக்கல் நேற்று மாவட்ட ஊராட்சி கூட்ட அரங்கில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் ஊரகப்பகுதிக்கு 10 பேரும், நகரப்பகுதிக்கு 2 பேரும் என மொத்தம் 12 பேர் மட்டுமே மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் கொடுத்திருந்தனர். இதனால் 12 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

சான்றிதழ்

அதன்படி ஊரகப்பகுதிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களான தி.மு.க.வைச் சேர்ந்த சத்யா சேட்டு, தீபா முருகன், சரளா சண்முகம், செல்வராஜ், கந்தசாமி, அ.தி.மு.க.வை சேர்ந்த காவேரி, தனபால், பா.ம.க.வைச் சேர்ந்த சரவணன், தே.மு.தி.க.வைச் சேர்ந்த குமார் ஆகிய 10 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று நகர பகுதிக்கு தர்மபுரி நகராட்சி 13-வது வார்டு தி.மு.க. நகராட்சி கவுன்சிலர் ஜெகன், அரூர் பேரூராட்சி துணைத் தலைவர் சூர்யா தனபால் ஆகிய 2 பேரும் என மொத்தம் 12 பேர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் 12 பேருக்கும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா வழங்கினார்.

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட தி.மு.க.வினருக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


Next Story