பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்:பெண் சமையலர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு


பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்:பெண் சமையலர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
x
தினத்தந்தி 14 Jun 2023 7:30 PM GMT (Updated: 14 Jun 2023 7:31 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 1,200 புதிய சமையல் எரிவாயு இணைப்புகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க மாவட்ட கலெக்டர் சாந்தி நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில் காலை உணவு திட்டத்திற்கு சம்பந்தப்பட்ட 250 பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்துவது குறித்த பயிற்சி கருத்தரங்கு தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கருத்தரங்குக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார். தமிழ்நாடு இண்டேன் வினியோகஸ்தர் சங்கத்தலைவர் ஆர்.ஞான வடிவேல்குமரன் வரவேற்றார். கோவை மண்டல இண்டேன் ஆயில் நிறுவனத்தின் துணை மேலாளர் சிவசூர்யா கிரண் கலந்துகொண்டு எரிவாயுவை பாதுகாப்பாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார். இந்த முகாமில் மாவட்ட வளங்கள் அலுவலர் ஜெயக்குமார், மகளிர் திட்ட அலுவலர் பகித் முகமது நசீர் மற்றும் மகளிர் திட்ட அலுவலர்கள், காலை உணவு திட்ட அலுவலர்கள், அனைத்து இண்டேன் வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story