சென்னை மேயர் பிரியா மீது பரபரப்பு புகார்


சென்னை மேயர் பிரியா மீது பரபரப்பு புகார்
x

முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

முதல்வர் கான்வாய் வாகனத்தில் தொங்கியபடி பயணித்த சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காசிமேடு பகுதியில் மாண்டஸ் புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவரது கான்வாய் வாகனத்தில் சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எபனேசர் ஆகியோர் தொங்கியபடி பயணித்தனர்.

இந்த நிலையில் இது மத்திய மோட்டார் வாகன சட்டம் 1988-ன் 93-வது பிரிவின் கீழ் குற்றம் என்றும் இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி சமூக ஆர்வலர் செல்வகுமார் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணையதளம் மூலமாக புகார் அளித்துள்ளார்.

பொதுமக்கள் வாகனத்தில் தொங்கியபடி பயணித்தால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கிறார்கள். அதுபோல இதுவும் சட்ட சட்டவிரோதமான செயல்தான் எனவே இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக செல்வகுமாரை நேரில் அழைத்து இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் அவரிடம் உள்ள ஆதாரங்கள் ஆகியவற்றை போலீசார் கேட்டுப் பெறுவர். தொடர்ந்து இந்த வழக்கில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.


Next Story